13சிறுபிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்.
சீடரோ அவர்களை அதட்டினர். 14ஆனால், இயேசு,
“சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், ,விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” என்றார். 15அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தைவிட்டுச் சென்றார்.

மத்தேயு 19:13-15

(ஒரு கத்தோலிக்க குருவானவரான அருள்பணி. ஸ்டீபன் தச்சில் அவர்களின் மறையுரையால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது)

ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உள்ளது? 24 மணி நேரம். (பொதுவாக 8 மணி நேர பணி வாழ்க்கை + 16 மணி நேர தனிப்பட்ட வாழ்க்கை)

நம் பிள்ளைகளை பணி வாழ்க்கைக்கு (career) தயார் செய்ய நாம் எத்தனை ஆண்டுகள் கல்வி புகட்டுகிறோம்? விளையாட்டுப் பள்ளி (play school) அல்லது தொடக்கப் பள்ளியிலிருந்து தொடங்கி, மேல்நிலைக் கல்வி முடியும் வரை சுமார் 14 ஆண்டுகள். அதன்பின் கல்லூரி/பல்கலைக்கழகக் கல்வி (சுமார் 4 ஆண்டுகள். சராசரியாக மொத்தம் சுமார் 18 ஆண்டுகள்.

ஒரு நாளில் வேலைக்காக அல்லது தொழிலுக்காக நாம் எத்தனை மணி நேரத்தை அர்ப்பணிக்கிறோம்? பொதுவாக சுமார் 8 மணி நேரம். (எப்போதும் வேலையே கதி என்று கிடப்பவர்களை (workaholics) நாம் கணக்கில் கொள்ள வேண்டாம்; அவர்கள் வேலையை மட்டுமே வாழ்க்கையாகக் கருதி, தங்களின் 24 மணி நேரத்தையும் அதற்கே ஒதுக்குபவர்கள். அத்தகையவர்கள் ஒரு கட்டத்தில் ஓய்வு பெற வேண்டிய சூழல் வரும்போது, அவர்கள் உடல்ரீதியாக உயிரோடு இருந்தாலும், அது அவர்களுக்கு இறப்பிற்குச் சமமாகத் தோன்றும்; ஏனெனில், அவர்கள் பணி வாழ்க்கையை மட்டுமே கொண்டிருந்தார்கள்.)

ஒரு மனிதனின் வெற்றியைத் தீர்மானிப்பது எது? அந்த 8 மணி நேர பணி வாழ்க்கையா அல்லது மீதமுள்ள 16 மணி நேர தனிப்பட்ட வாழ்க்கையா (personal life)?

“மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?” (மத்தேயு 16:26)

நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைதான் நம் வெற்றியைத் தீர்மானிப்பது. இந்தத் தனிப்பட்ட வாழ்க்கைதான் கடவுளுடனும், நமது வாழ்க்கை துணை, பிள்ளைகள், பெற்றோர் மற்றும் நண்பர்களுடனும் கொண்டுள்ள உறவில் நாம் வளர்வதற்கான நேரத்தை வழங்குவது. இதுவே நமது பணி வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், நம் முழு வாழ்க்கையையும் வெற்றிகரமானதாகவும் மாற்றுகிறது. எனவே, இந்த 16 மணி நேர தனிப்பட்ட வாழ்க்கை தோல்வியடைந்தால், அது நமது பணி வாழ்க்கையின் சாதனைகளையும் அர்த்தமற்றதாக்கி, நம் முழு வாழ்க்கையையுமே தோல்வியடையச் செய்துவிடும்.

அப்படியென்றால், 8 மணி நேர பணி வாழ்க்கையில் நம் பிள்ளைகள் சிறந்து விளங்க 18 ஆண்டுகள் தயார் செய்கிறோம் என்றால், 16 மணி நேர தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு நாம் எத்தனை ஆண்டுகள் அவர்களைத் தயார் செய்ய வேண்டும்? 18 ஆண்டுகள் X 2 = 36 ஆண்டுகள்.

நம் பிள்ளைகள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி பெற நாம் உண்மையில் எத்தனை ஆண்டுகள் அவர்களுக்கு ஆன்மீக மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த பயிற்சியையோ அல்லது தயாரிப்பையோ வழங்குகிறோம்?

தேவையான ஆன்மீக மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த பயிற்சியை நாம் நம் குழந்தைகளுக்கு வழங்காமல், அவர்கள் நல்வாழ்வு வாழ்வார்கள் என்று எதிர்பார்ப்பது அபத்தம். ஆன்மீக மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த பயிற்சி இல்லாத பட்சத்தில், அது நம் பிள்ளைகளை இறுதியில் “நரகத்திற்கு” வழிநடத்தக்கூடும். “திட்டமிடத் தவறுவது, தோல்விக்குத் திட்டமிடுவதற்குச் சமம்”.

நம் பிள்ளைகள் ஒரு நாள் விண்ணரசை வந்தடைய வேண்டும் என்று நாம் விரும்பினால், நாம் ஆன்மீக மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். குழப்பமும், அகந்தையும், பாவமும் மலிந்து கிடக்கும் இவ்வுலகில், நம் பிள்ளைகள் தூய்மையோடும் புனிதத்தோடும் வாழ்வதற்கு நாம் அவர்களைத் தயார் செய்ய வேண்டும்.

இறைவார்த்தை கூறுகிறது:

“இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?” (திருப்பாடல்கள் 119:9)

இறைவார்த்தை மற்றும் அவருடைய கட்டளைகளின்படி ஒருவன் தன்னை காத்துக்கொள்வதே மாசற்ற வாழ்வு வாழ்வதற்கான ரகசியம் என்று திருப்பாடல் ஆசிரியர் பிரகடனம் செய்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் நம் குழந்தைகளின் இதயத்தில் (நிலத்தில்) “இறைவார்த்தை” என்னும் விதையை விதைக்க வேண்டும்.

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்துவிட்டோம். செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் இருள், மிகுதியான ஆன்மீக வெறுமை மற்றும் ஆன்மீகப் பஞ்சம் நிறைந்த இந்தத் தற்கால யுகத்தில், நம் பிள்ளைகளின் இதயங்களை நாம் எவ்வாறு செப்பனிடலாம் என்பதைப் பற்றிச் சற்று சிந்திப்போம்.

இறைவார்த்தை என்னும் விதையைப் பெற்று, நற்கனிகளைத் தரும் பொருட்டு, நம் குழந்தைகளின் இதயங்களை (நிலத்தை) நாம் எவ்வாறு பண்படுத்தலாம்?

(பின்வருபவை எனது தனிப்பட்ட சிந்தனைகளாகும்)

நமது ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்து கூறியிருப்பது:

3“விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். 4அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. 5வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; 6ஆனால், கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின. 7மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. 8ஆனால், இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.
9 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்”

மத்தேயு 13:3-9

இயேசுவின் இந்த போதனையின் அடிப்படையில், 3 முக்கியமான சிந்தனைகளும் அதற்கான செயல்பாட்டுத் திட்டங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

1. நம் குழந்தைகளின் வாழ்க்கையில் அத்துமீறி நுழைபவர்களைப் பற்றி நாம் விழிப்புடன் இருக்கிறோமா?

“சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.” (மத்தேயு 13:4)

“அத்துமீறி நுழைபவர்கள்” என்பது இவையே: சமூக ஊடகங்கள் (social media), அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, விளையாட்டுகளில் மிதமிஞ்சிய ஈடுபாடு, ஆபாசம், மதுப்பழக்கம், புகைபிடித்தல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், மற்றும் இதர தீய பழக்கங்கள்.

இவை யாவும் கவனச்சிதறல்கள் என்பதையும், இவற்றை நாம் கட்டுப்படுத்தாவிட்டால் அவை அவர்களுக்குள் இருக்கும் எல்லா நன்மைகளையும் அழித்துவிடும் என்பதையும் நம் பிள்ளைகள் உணர்ந்து கொள்ள நாம் உதவுகிறோமா?

செயல்படுத்துவதற்க்கான அழைப்பு: கவனச்சிதறல்களைக் கண்டறிந்து அவற்றை வேரோடு பிடுங்கி எறிய குழந்தைகளுக்கு உதவுவோம். கவனச்சிதறல்களுக்கு மாற்றாக தனிப்பட்ட ஜெபம், குடும்ப ஜெபம் மற்றும் மகிழ்ச்சிக்குகரிய ஆன்மீகச் செயல்பாடுகளை (இசை, சைகைப் பாடல்கள், கலைப் படைப்புகள் போன்றவற்றின் மூலம் இறைவனைப் பாடித் துதிப்பது) அவர்களுக்குக் கற்றுக் கொடுப்போம்.

2. ஆன்மீகத்தில் வளர்வதற்கு அவர்களுக்குத் தகுந்த நேரத்தையும் மன அமைதியையும் நாம் வழங்குகிறோமா?

“வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன.” (மத்தேயு 13:5)

கல்வி, சிறப்பு வகுப்புகள் (enrichment classes), கூடுதல் பாடத்திட்டம், விளையாட்டுப் பயிற்சிகள், இசை வகுப்புகள் என நம் பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமான சுமைகளை ஏற்றும்போது, இறைவார்த்தையை வாசிப்பதற்கோ அல்லது உள்வாங்குவதற்கோ அவர்களுக்கு எங்கே நேரம் அல்லது மன அமைதி இருக்கும்?

நமக்கு வசதியாக இருக்கும்போது மட்டும் குழந்தைகளை ஞாயிறு திருப்பலிக்கும், மறைக்கல்வி வகுப்புகளுக்கும் அழைத்துச் செல்வது பயனற்றதாக முடிந்துவிடக்கூடும்.

செயல்படுத்துவதற்க்கான அழைப்பு: சில கூடுதல் செயல்பாடுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்து (சலசலப்புகளைக் குறைத்து), அவர்கள் முழு இதயத்தோடு திருப்பலியில் பங்கேற்கவும், திருவருட்சாதனங்களைப் பெறவும், இறைவார்த்தையை வாசித்து தியானிக்கவும் நேரத்தை உருவாக்குவோம்.

3. நம் குழந்தைகளின் நண்பர்கள் மற்றும் அவர்கள் மீது செல்வாக்கு செலுத்துபவர்கள் (influencers) யார் என்பதில் நாம் விழிப்புடன் இருக்கிறோமா?

“மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.” (மத்தேயு 13:7)

நம் குழந்தைகளின் நண்பர்கள் யார், அவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள் என்பதை நாம் கடைசியாக எப்போது சரிபார்த்தோம்? இங்கு செல்வாக்கு செலுத்துபவர்கள் என்பது பிரபலங்கள், திரைப்பட நாயகர்கள் மற்றும் புகழ், பெருமை போன்ற உலக ஆசைகளாகவும் இருக்கலாம்.

செயல்படுத்துவதற்க்கான அழைப்பு: நம் குழந்தைகளுக்கு மிக நெருங்கிய நண்பர்களாக (besties அல்லது குறைந்தபட்சம் நல்ல தோழர்களாக) மாற பாடுபடுவோம். முன்மாதிரியான நண்பர்கள், புனிதமான குருக்கள், ஆன்மீக வழிகாட்டிகள் மற்றும் புனிதர்கள் போன்ற போற்றத்தக்க நல்வழிகாட்டிகளை அவர்கள் கண்டடைய அவர்களுக்கு உதவுவோம்.

நமது லட்சியம்: நம் பிள்ளைகளின் இதயங்களை உழுது “வளமான நிலமாக” மாற்றுவது…

“இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.” (மத்தேயு 13:8)

நம் குழந்தைகளின் இதயங்களை இறைவார்த்தையை ஏற்றுக்கொள்வதற்கும், உண்மையான கத்தோலிக்க கிறிஸ்தவ வாழ்க்கைமுறையின் மூலம் அதனை வளர்ப்பதற்கும் நாம் மனப்பூர்வமாகத் தயார் செய்தால், இறைவார்த்தை அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றி, நித்திய வாழ்விற்கான நற்கனிகளைத் தரச் செய்யும்.

அனைத்திற்கும் மேலாக இறை ஆட்சியை நாடவும், எனது குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும், என்னை மாற்றிக்கொள்ள நான் தயாராக இருக்கிறேனா?

Christopher Rex Avatar

Published by

Categories:

Leave a comment